education

பழைய சொல், புதிய தேடல் ‘எவன்கொலோ’ - அண்டனூர் சுரா

ஐ.நா பொதுச்சபையின் 74 ஆவது விவாதத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளது. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் போர் மூண்டால் அது உலக நாடுகளைப் பாதிக்கும்,... என்றார். அவரது உரையை இந்திய பத்திரிகைகள்  ‘ hate speech’ என எழுதின. அவரது உரைக்குப் பதிலளித்த  ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் விதிஷா மைத்ரா, ‘ Words matter in diplomacy (ராஜரீக உறவுகளில் வார்த்தைகள் முக்கியமானவை); Pogrom ( இனப்படுகொலை), bloodbath( இரத்தக்களரி), racial superiority ( இனவாதம்), pick up the gun( துப்பாக்கியைத் தூக்கு), fight to the end ( கடைசி வரை சண்டையிடு) என இம்ரான்கான் பயன்படுத்திய வார்த்தைகள் இடைக்காலத்தைப் பிரதிபலிப்பவை தவிர, 21 ஆம் நூற்றாண்டின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவை அல்ல’ என்றவர் ஐ.நா பெருமன்றம் வன்சொற்களை விடவும் இன்சொற்களையே பெரிதும் விரும்புவதஆங்கிலத்தில் உரையாற்றினார்.

21 ஆம் நூற்றாண்டின் வன்சொற்களென இரு சொற்களை உலக நாடுகள் அறிவித்துள்ளன. அவை Pogrom , Genocide . இவ்விரண்டும் பேரினவாதம் என்கிற பெயரில் குறிப்பிட்ட இனமக்களைத் திட்டமிட்டு கொன்றொழிப்பதைக் குறிக்கும் சொற்களாகும்.
வன்சொல் × இன்சொல்.
இவ்விரு சொற்களையும் திருவள்ளுவர் ஒரே குறளில் பயன்படுத்தியிருக்கிறார். ‘இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது’.
எவன்கொலோ என்பது என்ன?
இச்சொல் முதல் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.
‘கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாங்கண் டது’ (கண்விதுப்பு அழிதல்).
எவன்கோலோ - இச்சொல்லை அதிகமாக  இடம்பெற்றுள்ள இலக்கியம் கலித்தொகை. பயன்படுத்திய ஆசிரியர் - நல்லந்துவனார்.
அவலம் மெய்க் கொண்டது போலும் அஃது எவன்கொலோ? (காதலன் குறித்த காதலியின் மனக்கவலை).
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்கொலோ? (காதலன் மீதான ஏக்கம் நோய்).
‘எவ்வத்தால் இயன்ற போல், இலை கூம்பல் எவன் கொலோ?’ (காதலியின் ஏக்கம் கண்டு மரத்தின் இலைகள் உதிர்கின்றன)
நாலடியாரில் இச்சொல் இடம் பெற்றுள்ளது. ‘எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ/உட்கான் பிறன்இல் புகல்’.
‘தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாடுதார்,வாமான் தேர் மன்னரைக் காய்வது 
எவன்கொலோ?’ (பழமொழி நானூறு). அதாவது தன்னையே பாதுகாக்கத் தெரியாதவன் குதிரையில் செல்லும் மன்னனை எதிர்ப்பானேன்?
திருக்குறள் உரையாசிரியர் மு.வரதராசனார் எவன்கொலோ என்பதற்கு  ‘என்ன பயன் கருதியோ’ என்பதாக விளக்கம் தருகிறார்.
எவன்கொலோ  -  எதற்காக (கலைஞர் மு.கருணாநிதி).
எவன்+கொல்+ஓ எனப் பிரித்து பொருள் தருகிறார் தேவநேயப் பாவாணர். எவன் - என்ன பயன், கொல் - அசைநிலை. ஓ - இரக்கப் பொருளது. அதாவது இரங்கிக்கூறுதல் (kindly speech). எவன்கொலோ என்கிற சொல்லை முதல் அதிகாரத்தில் திருவள்ளுவர் கட்டளைச் சொல்லாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார் பாவாணர். ‘கற்றதனால் ஆய பயன்கொல்’. இங்கு கொல் என்பது என்ன என்பதாகப் பொருள் தருகிறது.
பாரதியாரின் தேசியகீதங்கள் பாடலில், சத்ரபதி சிவாஜி (தன் சைனியத்திற்குக் கூறியது) பகுதியில்  எவன்கொலோ சொல்லை ‘யார்’ என்கிற பொருளில் பயன்படுத்தியிருக்கிறார். ‘மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய்ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?’.
‘எவன்கொலோ வன்சொல் வழங்கு வது ‘ இவ்வரி ஆங்கிலத்தில் Why makes he use of harsh words என்பதாக மொழியாக்கம் பெறுகிறது.
எவன்கொலோ என்பதற்கு யார், என்ன பயன், என்ன பயன் கருதியோ, எதற்காக, எதனால் ,... என்பதாக பொருள் கொண்டாலும் ‘ஏன்’  என்பது பொருத்தமான  பதமாகும்.