economics

img

பிரிக்சின் சர்வதேச பணக்கூடை உருவாகிறது?

ரியாத், ஜூலை 15- கடந்த மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில், தயார் நிலையில் உள்ள செலாவணிக்கான பணக்கூடை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் முன்மொழிவு உலக நிதித்துறை வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலக அளவில் அமெரிக்க டாலர்தான் நாடுகளுக்கிடையிலான பொது நாணயமாக இருந்து வருகிறது. சர்வதேச நிதி அமைப்பின் (ஐ.எம்.எப்) பணத்தை எடுக்கும் சிறப்பு உரிமைதான் அனைவரும் பயன்படுத்தக் கூடியதாக இருந்து வருகிறது. இதுதான் உலக நாடுகள் மீது அமெரிக்கா தனது மேலாண்மையை வைத்துக் கொள்ள உதவி வருகிறது. இந்த உரிமை என்பது அந்நியச் செலாவணி அல்ல என்றாலும், இதன் கூடையில் அமெரிக்க டாலர், யூரோ, பவுண்டு, யென் அண்மையில் இந்தப் பட்டியலில் இணைந்த ரென்மின்பி ஆகிய நாணயங்கள் உள்ளன. இதற்கு மாற்றாகவே ரஷ்யா தனது முன்மொழிவை வைத்திருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் பிரிக்ஸ் அமைப்பில் தற்போது உள்ள ஐந்து உறுப்பு நாடுகளின் நாணயங்கள் அடங்கிய பணக்கூடை உருவாக்கப்படும். இதில் ரியால், ரூபிள், ரூபாய், ரென்மின்பி ரேண்டு ஆகிய நாணயங்கள் இடம் பெறும். அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு மாற்றாக இந்தப் பணக்கூடை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்கா மிரட்சி

உலக அளவிலான நாணயம் என்ற அந்தஸ்தைச் சிறிது, சிறிதாக இழந்து வருகிறோம் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு வந்துவிட்டது. டாலர் அந்தஸ்து சரிந்து வருவதால் அமெரிக்காவிற்கு ஒரு முக்கியமான இழப்பு ஏற்படும். உலக நிதிச் சந்தையைத் தனது பிடிக்குள் வைத்திருக்கும் தனது பலனை அமெரிக்கா இழக்கப்போகிறது. 

விரிவடையும் பிரிக்ஸ்

சவூதி அரேபியா, துர்க்கியே மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பு நாடுகளாவதற்கு விண்ணப்பித்துள்ளன. ஏற்கனவே ஈரான் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இதுகுறித்து பிரிக்ஸ் சர்வதேசக் குழுவின் தலைவர் பூர்ணிமா ஆனந்த், ‘‘இது நல்ல நடவடிக்கையாகும். விரிவடையும் நடவடிக்கை எப்போதுமே பலனளிக்கக் கூடியதாகும். நிச்சயமாக இந்த நடவடிக்கை பிரிக்ஸ் அமைப்பின் செல்வாக்கை உலக அளவில் முன்னேறச் செய்யும்’’ என்றார். ஏற்கனவே பிரிக்ஸ் நாடுகள் உலகின் 40 விழுக்காடு மக்கள் தொகையைத் தனக்குள் வைத்துள்ளது. இதில் மேலும் பல நாடுகள் இணைவதால், இந்த எண்ணிக்கை 50 விழுக்காட்டைத் தாண்டி விடும். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரிக்ஸ் அமைப்பின் மதிப்பும் 35 விழுக்காட்டைத் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வர்த்தகம் அதிகரிப்பு

பிரிக்ஸ் நாடுகளுடனான தனது வர்த்தகத்தை சீனா பெருமளவில் அதிகப்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 14.1 விழுக்காடு அளவுக்கு இந்த அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட மற்ற உறுப்பு நாடுகளுடனான வர்த்தகம் மேலும் பலப்படும் என்று சீனா கூறியுள்ளது. பிற நாடுகளில் இருந்து நிலக்கரி, விவசாயப் பொருட்கள், கனிமங்கள் உள்ளிட்டவற்றை சீனா இறக்குமதி செய்திருக்கிறது.