districts

img

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பறவைகள் வருகை அதிகரிப்பு

செங்கல்பட்டு, டிச.12- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் விரைவாக நிரம்பி வருவதால் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வருகை தரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் 73 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வேடந்தாங்கல் ஏரி. இந்த ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு பறவைகளுக்கான இதமான பருவ நிலை நிலவுவதால், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் இருந்து பல்வேறு விதமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.

மேலும், ஏரியின் நடுவே உள்ள மரக்கிளைகளில் கூடு கட்டி முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கும் பறவைகள், குஞ்சுகள் வளர்ந்ததும் தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்வது வழக்கம்.

மிக்ஜம் புயல் காரணமாக வேடந்தாங்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்தால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருகில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தற்போது ஏரியில் 11 அடிக்கு மேல் நீர் நிரம்பியுள்ளது.

தற்போது பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.  ஏரியில் உள்ள மரங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என கருதப்படுகிறது.

ஏரியில் உள்ள மரங்களில் தங்கியுள்ள பறவைகளை கண்டு ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளது, உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பறவைகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.