செங்கல்பட்டு, அக். 17- குடிமனைப் பட்டா, சமுதாயக் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி சலவை தொழிலாளர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர். மதுராந்தகம் வட்டம், தேவத்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி சலவை தொழி லாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் 66 குடும்பங்கள் குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி சிஐடியு-வுடன் இணைந்து நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்தை சந்தித்த மகாத்மா காந்தி சலவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. கண்ணதாசன், அனைவரும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், ஆதிதிராவிடர் புதிரை வண்ணார் இன மக்களுக்கு சாதி சான்று, இலவச இஸ்திரி பெட்டி, தையல் இயந்திரம் மற்றும் சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தார்.