வேலூர், ஜன. 6- வேலூர் மாவட்டம், பென்னாத்தூரிலிருந்து அமிர்தி செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பென்னாத்தூர் அமிர்தி சாலையை சீரமைக்க கோரி நஞ்சு கொண்டாபுரம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை (ஜன.5) அந்த பகுதில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை (ஜன.6) வேலூரில் இருந்து அமிர்தி செல்லும் அரசு நகரப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.