districts

img

சாலை அமைக்காததால் மக்கள் அவதி

வேலூர், மே 10- காங்கேயநல்லூரில் ஜல்லிக்கற்கள் கொட்டி ஒரு மாதமாகியும் சாலை போடாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். வேலூர் காட்பாடி காங்கேயநல்லூர் 10ஆவது வார்டு விநாயகர் கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆனால் இங்கு சாலை அமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. அப்போது தெருவை சமன்செய்து ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. உடனடியாக சாலை வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் அவர்கள் எண்ணத்திற்கு மாறாக தெருவில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட நிலையில் அப்படியே பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். காங்கேயநல்லூரில் இதேபோல் மேலும் சில தெருக்களில் ஜல்லி கொட்டப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாலைகள் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே உடனடியாக அனைத்து தெருக்களிலும் சாலை அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.