districts

img

சர்வாதிகாரி மோடியுடன், ஜனநாயகவாதி அம்பேத்கரை ஒப்பிடுவதா ? : இரா.முத்தரசன் கண்டனம்

சர்வாதிகாரத்திலும், பாசிசத்திலும் நம்பிக்கை உள்ள நரேந்திரமோடியை, ஜனநாயகவாதி அம்பேத்கருடன் ஒப்பிடுவது கடும் கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த இரா.முத்தரசன் கூறியதாவது :

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இறக்கை கட்டி பறக்கிறது. இதனால்,அனைத்து அத்தியாவசிய பண்டங்களின் விலையும் உயர்ந்து விட்டது. மருந்து, சமையல் எரியாவு  விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதேநிலை நீடித்தால், விலைவாசி உயர்வுக்கு எதிராக இலங்கையில்  நடக்கும்  போராட்டம் போல்  இந்தியாவிலும் நடப்பதற்கு வெகு நாட்கள் ஆகாது.

 வர்த்தக கேஸ் விலை 250 ரூபாய்  அதிகரித்துள்ளது. சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி கொடுமைகளை எதிர்த்து விலைவாசி உயர்வை எதிர்த்து இந்தியாவிலும் மிகப் பெரிய போராட்டங்கள் நடை பெறுவதை தவிர்க்க முடியாது.

இந்தப் போராட்டங்களை திசை திருப்புவதற்கு மக்களை பிளவுபடுத்தும் வகையில் மதரீதியான மோதல்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை பாஜகவினர் மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, பள்ளிவாசல்களில் இருக்கக்கூடிய ஒலிபெருக்கிகளை கழட்ட வேண்டும். அங்கு, நாங்கள் அனுமான் மந்திரங்களை  5 முறை ஓதுவோம். அப்படி ஓதும் போது  அவர்கள் வந்தார்கள் என்றால்,  எங்கள் கைகள் கட்டப் படவில்லை. சுதந்திரமாக தான் உள்ளது என்று வன்முறையை தூண்டக்கூடிய வகையில் பகிரங்கமாக அறிவிக்கின்றனர். 

மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பதற்கு உள்ள முயற்சிகளை மேற்கொள்கிறார்.   மக்களைப் பற்றி கவலைப்படாமல்,  கார்ப்பரேட் முதலாளிகளைப்   பற்றியே கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.  

ஆளுநருக்கு மயிலாடுதுறையில் கருப்புக்கொடி காட்டியது குறித்த கேள்விக்கு, தமிழ்நாடு ஆளுநர்  ரவி தமிழ்நாட்டு மக்களை மதிக்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு மதிப்பளிக்க   வேண்டும்.

நீட் நுழைத்தேர்வுக்கு விலக்கு கோரி  நிறைவேற்றப்பட்ட மசோதாவை கிடப்பில் போட்டுள்ளார்.அலட்சியப்படுத்தியதால் தான் தேநீர் விருந்தை புறக்கணித்தோம். அரசும் புறக்கணித்தது.

எனவே, உடனடியாக சட்டப்பேரவை மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வைக்காவிடில் மயிலாடுதுறை மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு சென்றாலும் மக்கள் கருப்புகொடி காட்டுவார்கள்.  

மதிப்பிற்குரிய இளையராஜா அவர்கள் இசைத் துறையில் மிகப் பெரிய ஞானி. அவர் மேலும் மேலும் வளர வேண்டும். அவருடைய வளர்ச்சியை கண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெருமிதம் கொள்கிறது.

அவர் கருத்தைச் சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் அவர் பல கருத்துகளை சொல்கிறார். ஆனால் அம்பேத்காருடன் மோடியை  ஒப்பிட்டு சொல்வதை உலகம் ஏற்காது. அம்பேத்கார் மிகச் சிறந்த ஜனநாயகவாதி. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாமேதை. இந்தியா எவ்வாறு நடக்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு சட்டம்.அந்த அரசியலமைப்புச் சட்டம் வகுத்து தந்ததுதான் மதச்சார்பின்மை.

அதை தவிர்த்து ஜனநாயகத்தின் மீது கிஞ்சிற்றும் நம்பிக்கையில்லாத சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உடைய பாசிச கொள்கையில் நம்பிக்கை உடைய மோடியையும் மிகச் சிறந்த ஜனநாயகவாதி ஆன அம்பேத்காரையும் ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.