districts

விருதுநகர் அருகே முயல் வேட்டையாடியவர்கள் கைது

விருதுநகர், பிப்.21- விருதுநகர் அருகே பூசாரிப்பட்டியில் காட்டுப்பகுதி யில்  முயல் வேட்டையாடியவர்களை பிடித்து வனத்துறை யினர் விசாரணை நடத்தினர். 29 முயல்கள் பறிமுதல்  செய்யப்பட்டது. விருதுநகர் அருகே பூசாரிபட்டியில் காட்டுப்பகுதியில் பலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த விருதுநகர் வனப்பாதுகாப்பு படை அலுவலர் கார்வேந்தன் தலைமை யிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று   சோதனை யில் ஈடுபட்டனர். அதற்குள் வேட்டையாடியவர்கள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து, விரைந்து  வந்த வனத்துறையினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த 3 லாரிகளை மடக்கி சோதனையிட்டபோது, அவர்கள் வேட்டைக்கு சென்று வந்தது தெரிய வந்தது. எனவே, . விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், வேட்டையில் ஈடுபட்டவர்கள்,  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கருத்தலக்கம்பட்டி மற்றும் புதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், தங்களது  குல தெய்வத்திற்காக பாரி வேட்டை  என்ற பெயரில் வேட்டையாடுவது வழக்கம் எனவும்  வனத்துறையினரிடம் தெரிவித்தனர். மேலும், அவர்களிடமிருந்து 29 முயல்கள் 3 கீரிப்பிள்ளை,1 கவுதாரி,1 அணில் ஆகியவற்றை இறந்த  நிலையில் பறிமுதல் செய்தனர். மேலும் வேட்டையாட பயன்படுத்திய  நாய் மற்றும் கவண், கம்பு உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேற்படி வேட்டையில் ஈடுபட்ட அனைவர் மீதும்  வழக்குப் பதிவு செய்து  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.