வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இராண்டாம் கட்ட அகழாய்வில் தங்க தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில், முதல் கட்ட அகழாய்வு பணியில், சுமார் 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 15 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இங்கிருந்து சுடுமண்ணாலான புகைப்பிடிப்பான், பெரிய தட்டு, தக்களி பானை, தோசைக்கல், இலை வடிவிலான அச்சு உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி, சங்கு கலைப் பொருள்கள் உற்பத்திக் கூடத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு, வெள்ளை நிறத்துடன் கூடிய சதுரம், உருண்டை வடிவிலான மெருகூட்டும் கற்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட சல்லடை, பானை உள்பட 10-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது தங்க தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3 கிராம் எடைக்கொண்ட தங்கத் தாலியில் 40% தங்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.