districts

img

நீதிமன்ற உத்தரவை மீறும் தனியார் கல்குவாரி நிறுவனங்களை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ளது புலியூரான் ஊராட்சி. இங்குள்ள பன்னிக்குண்டு கண்மாயின் கரையில் சட்ட விரோதமாக நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் கல்குவாரி நிறுவனம், கனரக வாகனங்களை இயக்கி வருகிறது. இதனால், கண்மாயின் மடைகள், கழுங்குகள் மற்றும் நீர்வரத்து ஓடைகள் ஆகியவை அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு விஷ்னுசூர்யா என்ற தனியார் கல்குவாரி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்கள் அவ்வழியே  சென்று வந்தன.

எனவே, இதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பொது மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவ்வழியே வாகனங்கள் செல்வதற்கு தடையாணை பெறப்பட்டது. இதையடுத்து, அந்நிறுவனம் அவ்வழியில் வாகனங்களை இயக்கவில்லை.

இந்த நிலையில் மற்றொரு தனியார் நிறுவனம் அதே பகுதியில் கல்குவாரி  அமைத்து, வாகனங்களை கண்மாய் கரை வழியாக இயக்கி வருகிறது. எனவே, கல்குவாரி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கனரக வாகனங்கள் இயக்குவதை முற்றிலும் தடை செய்திட வேண்டுமெனவும், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

சிவகாசி ஒன்றியம் பாரப்பட்டி கிராமத்தில் விளை நிலங்களுக்கு அருகில் கல்குவாரி அமைக்கப்பட்டது. இதன் அருகே,  80மீட்டர் தொலைவில் பாரப்பட்டி கிராமமும், புதுக்கோட்டை கண்மாய் 50மீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும்,  20மீட்டர் தொலைவில் உயர்மின் அழுத்த கோபுரமும்  பொதுமக்கள் செல்லும் சாலையும் உள்ளது.

எனவே, தனியார் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டுமென கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்பும், அரசு அதிகாரிகள் குவாரி உரிமையாளர்களுக்கு அதரான நிலையில் உள்ளனர்.

இதேபோல், திருவில்லிபுத்தூர் ஒன்றியம் அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் தனியார் கல்குவாரி  நிறுவனத்தார் கல்குவாரி மற்றும் கிரசர் அமைப்பதற்கான இயந்திரங்களைப் பொருத்தி வருகின்றனர். இதனை கண்டித்து விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை கண்டித்தும், தனியார் குவாரியை அகற்றக் கோரியும் 3 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் தலைமை தாங்கினார். துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் வி.முருகன் பேசினார். போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் பேசினார். முடிவில் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கண்டன உரையாற்றினார்.

மேலும் இதில் மாவட்ட பொருளாளர் மனோஜ்குமார், மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்பாராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச்சாமி, பி.என்.தேவா,  எம்.சுந்தரபாண்டியன், எல்.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.கணேசன், பி.பாலசுப்பிரமணியன், ஆர்.முத்துவேலு, எம்.திருமலை பாறைப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் எம்.புஷ்பம் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் அவர் வரும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்து விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முடிவில், புதன்கிழமை மாலைக்குள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி பன்னிக்குண்டு கண்மாய் கரையில் கனரக வாகனங்கள் செல்வது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்.

அச்சம் தவிழ்த்தான்,பாறைப்பட்டி மற்றும் செவலூர் ஆகிய கிராமப் பகுதியில் விதிமுறைகளை மீறி கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தால்  உடனடியாக குவாரிக்கான அனுமதி ரத்து செய்யப்படும். குவாரி தொடங்குவதற்கான அனுமதி வழங்கிய குழுவினர் தவறான தகவல்களை அளித்திருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.