பெண் கல்வி கற்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை தான் இந்தியா முழுவதும் இருந்தது. 19-ஆம் நூற்றாண்டில் சாவித்ரிபாய் பூலே, பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து, பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் அவரால், பெண்களும், அனைத்து சமூகத்தினரும் படிக்கக் கூடிய பொதுப்பள்ளி முறையை மகாராஷ்ட்டிராவில் உருவாக்க முடிந்தது. பெண் கல்வியைப் பற்றி எண்ணும் போதெல்லாம் சாவித்ரிபாய் பூலே அவர்களை நினைவு கூராமல் இருக்க இயலாது. வரலாற்றின் பெரும் பகுதியில், அநேக சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான கல்வி பெறும் வாய்ப்பின்றி இருந்த நிலையில், பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் வளர்ச்சி பெற்ற பெண்ணிய இயக்கம் அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு போன்றவை பெண்களுக்கான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தன. சில மேற்கு நாடுகளில் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்கள் ஆண்களை விட உயர் கல்வி பெறுகிறார்கள். ஆனால் இன்னும் பல நாடுகளில் பெண் கல்வி ஆண்களை விட பின் தங்கியதாகவே உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டு இந்தியா. இந்தியாவில் 53.63 சதவீதம் பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள். ஆண்கள் 75.26 சதவீதம் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஏறத்தாழ பெண்களை விட ஆண்கள் 20 சதவீதம் கல்வியறிவில் மேம்பட்டவர்களாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கல்வியின் தரம் உயர்த்தப்பட்டு, குறிப்பாக பெண்கல்வி நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டதின் அடிப்படையில் ஆராய்ச்சி படிப்பில் கடந்த ஆண்டில் இந்தியாவிலேயே மொத்தம் 10,399 பெண்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தில், 5,007 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் என கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. இந்திய அளவில் தமிழகத்திலேயே அதிக பெண்கள் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருப்பது, மற்றைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் பெண்கல்வி உயர்ந்திருப்பது கண்கூடாக தெரிகிறது. கல்வியறிவில் முன்னேறியதைப்போலவே, இன்று 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் பணிக்கு செல்ல தொடங்கி இருக்கின்றனர். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தொழில் துறையின் கணக்கெடுப்பின்படி, இந்திய தொழில் துறைகளில் பணிபுரியும் 15.8 லட்சம் பெண்களில் 6.79 லட்சம் அல்லது 43 சதவீதம் தமிழ்நாட்டு பெண்கள் உள்ளனர். இது தேசிய சராசரியை விட மாநிலத்தில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதே போல் துறைகளிலும், போட்டித் தேர்வுகளின் மூலம் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை என்பது, அக்குடும்பத்தில் உள்ள பெண்ணின் வருமானத்தையும் உள்ளடக்கியதாக மாறி வருவது சமூகத்தின் ஆரோக்கியமான மாற்றமாக உள்ளது. குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யவும், பொருளாதார மேம்பாடு அடையவும், பணிக்கு செல்ல வேண்டிய நெருக்கடி ஒருபுறம் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் கூட, பணிக்கு செல்வதன் மூலம் பெண்களுக்கு பொருளாதார தற்சார்பும், சுயமதிப்பும் கூடியுள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.