districts

img

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடி, ஜூன் 29 தூத்துக்குடியில் வருகிற 7-ஆம் தேதி துவங்க உள்ள நெய்தல் விழா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் ஜூலை 7 முதல் 10-ஆம் தேதி வரை நெய்தல் விழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தினமும் சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் அந்த அரங்குகளை கண்டுகளிக்கும் வகையில் இந்த விழா பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.  கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், நெய்தல் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  இதில், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

;