districts

பொது விழாக்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்

புதுக்கோட்டை, அக். 25 - திருவிழாக்கள் மற்றும் பொது விழாக்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதியின் நீண்ட கால கோரிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பி னருமான சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. இதே 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒன்றிய அரசும் தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு மீண்டும் ‘மஞ்சள் பை’ திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில் ஓரளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது,

இருந்தாலும் தீபாவளி போன்ற  பண்டிகை காலங்களில் நெகிழி பயன்பாடு சற்று அதிகரித்துள்ளது என்ற தகவல் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. எதிர் காலத்தில் திருவிழாவாக இருந்தாலும், பொது விழாக்களாக இருந்தாலும் அனைவரும் நெகிழி பயன்பாட்டினை குறைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பிளாஸ்டிக் பயன்பாடு மனித இனத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக மண்ணில் வாழ்கின்ற  உயிரினங்களுக்கும், நிலங்களுக்கும் கேடு விளைவிக்க கூடியது. அதேபோல் கடல், ஏரி, குளங்கள் அனைத்தையும் மாசு படுத்த கூடிய‌ பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் தவிர்க்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 187 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறு சுழற்சிக்காக சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் இதனை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”. இவ்வாறு அமைச்சர் கூறினார்.