districts

img

உசிலம்பட்டி அருகே 3 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இரும்பு உருக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு

மதுரை, அக்.24- மதுரை உசிலம்பட்டி அருகே புத்தூர் மலைப்பகுதியில் பழமை யான பாறை ஓவியங்களை தொல்பொருள் ஆய்வாளர் காந்தி ராஜன் குழுவினர் கண்டறிந்தனர். புத்தூர் மலை உசிலம்பட்டி-திரு மங்கலம் சாலையில் உள்ள ஏ.ராமநாதபுரத்திலிருந்து மலைப்பட்டி சாலையில் அமைந்துள்ளது. புத்தூர் மலைக்கு மேற்கே உள்ள பகுதியில் சமணர்கள் வாழ்விடங்களும் புடைப்புச் சிற்பங்களும் குகையில் காணப்படுகின்றன. அதே குகையில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  3 ஆயிரம் ஆண்டிற்கு  முற்பட்ட தாழிப் பானைகள், கருப்பு-சிவப்பு பானை ஓவியங்கள், இரும்பு உருக்கப்பட்டதற்கான தடயங்கள் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து கலை வரலாற்றியல் ஆய்வாளர் க.த.காந்திராஜன் செவ்வாயன்று நமது செய்தியாளரிடம் கூறியதாவது:- இங்குள்ள பாறையில் வெள்ளைநிற கோட்டோவியங்கள்  உள்ளன. இவை 3,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம். வேட்டைச் சமூகம், வேளாண் சமூகம் என வெவ்வேறு காலகட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. வில்லேந்திய மனிதன்,

குதிரை வீரன், குதிரை வீரனுடன் போர்புரியும் வீரன் என 35 ஓவியங்கள் உள்ளன.  இவற்றில் ஆண், பெண் சேர்க்கை தொடர்பான ஓவியமும் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில்தான் இது போன்ற ஆண்-பெண் சேர்க்கை தொடர்பான ஓவியம் காணப்படுகிறது. காட்டுப்பகுதியில் மழை பெய்தால் தங்குவதற்கு ஏற்ற குகைகளும் அந்த காலகட்டத்தில் இருந்துள்ளது. வேட்டைச் சமூகம் இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் இப்பகுதியில் இன்றைக்கும் வாழும் பளியர் இனத்தைச் சேர்ந்த வேட்டைச் சமூகம் உள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், உசிலம்பட்டி அருகிலுள்ள கொங்கபட்டியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன. இதில் தத்தன், அமரதத்தன் போன்ற எழுத்துகள் படிக்கக்கூடிய அளவில் இருக்கின்றன. மற்ற எழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளன. இப்பகுதியில் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.