திருப்பூர், மார்ச் 17- திருப்பூர் கேத்தம்பாளையம் தியாகி ஆர்.பன்னீர்செல்வம் 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிஐடியு பனியன் தொழிற்சங்கத்தினர் 50 பேர் ரத்ததானம் செய்தனர். திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்த தான வங்கியில் வியாழனன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் ஆர்.காளியப்பன் தலைமையில் பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்கம் பொதுச்செயலாளர் ஜி.சம்பத் ரத்தம் வழங்கி இந்த முகாமை துவக்கி வைத்தார். இதில் வாலிபர் சங்க வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சதீஷ், சந்தோஷ் குமார், மாவட்ட குழு உறுப்பினர் ஆ.சிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர்.முருகேசன், ரத்த வங்கி மருத்துவர் ஜெ.வசந்தகுமார் ஆகியோர் இம்முகாமில் பங்கேற்று மேற்பார்வை செய்தனர். மொத்தம் 50 பேர் ரத்த தானம் வழங்கினர்.