கண்ணூர், ஏப். 9- இடது ஜனநாயக முன்னணி அரசின் திட்டத்தை பின்னுக்கு இழுக்க முயற்சிக்கும் சக்திகள், கேரளாவில் நடக்கும் எந்த வளர்ச்சியையும் தடுக்கும் நோக்கத்தில் உள்ளனர் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை கூறினார். சில ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை. சிபிஎம் ஒரு கட்சியாக சுற்றுச்சூழல் அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் யெச்சூரி, பினராயி, நான் உட்பட ஒருமித்த கருத்துடன் உள்ளோம் என்றார் ராமச்சந்திரன்பிள்ளை. சில்வர்லைன் விவகாரத்தில் ஒன்றிய, மாநில தலைமைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்திருந்தார். இது கடந்த காலங்களில் பல முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; இதை வேறு எந்த மொழியில் குறிப்பிட வேண்டும் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த யெச்சூரி கூறினார். திட்டம் தொடர வேண்டும்; தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்று வியாழனன்று யெச்சூரி குறிப்பிட்டார். ஆனால் மலையாள மனோரமா போன்ற ஒருசில பத்திரிகைகள் சில்வர்லைன் திட்டத்துக்கு எதிரான கருத்துகள் மாநாட்டில் எழுந்ததாக கற்பனை கருத்துகளை வெளியிட்டுள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை வெள்ளியன்று (ஏப்.8) எஸ். ராமச்சந்திரன்பிள்ளை சந்தித்தார். அப்போது அவர், சிபிஎம் அரசியல் தீர்மானத்தின் பொதுக் கருத்துகளை பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டதாக கூறினார். நாட்டை இந்து நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. அதை எதிர்க்க வேண்டும். இதில் யார் என்ன கொள்கையை கடைபிடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். காங்கிரஸ் கூட்டணி என்பது அவர்கள் முடிவு செய்ய வேண்டிய விசயம் என்றும் அவர் தெரிவித்தார்.