கும்பகோணம், டிச.7 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கடந்த 60 வருடங்களாக பொது நூலகம் வாடகை வீட்டில் இருந்து வந்தது. அங்கு சுகாதாரம், காற்றோட்டம் இல்லாததால், மாணவர்கள் மற்றும் வாசகர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இது தொடர்பாக திருபுவனத்தில் சொந்தமாக புதிய நூலக கட்டிடம் கட்டித் தர தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருபுவனம் கிளை சார்பாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தது. அதன்படி, அப்போது பேச்சுவார்த்தை நடத்தியதில் புதிதாக கட்டிடம் கட்டித் தருவதாக அப்போதைய பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. ஆனால், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேறாததால், புதன்கிழமை திருபுவனம் சன்னதி தெருவில் தமுஎகச மற்றும் வாசகர் வட்டம் சார்பில், திறந்தவெளியில் வாசிப்பு இயக்க போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது சம்பந்தமாக தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கொறடாவும் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கோவி.செழியன், சம்பந்தப்பட்ட திருபுவனம் பேரூராட்சி நிர்வாகத்திடம் திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, திருபுவனத்தின் மையப் பகுதியான ஒரு இடத்தில், புதிய நூலக கட்டிடம் கட்டித் தருவதாக ஒப்புதல் அளித்தார். பின்னர், திருபுவனம் பேரூராட்சி தலைவர் அம்சவல்லி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 6 மாதத்திற்குள் திருபுவனத்தில் புதிய பொது நூலக கட்டிடம் கட்டப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உறுதியளித்தனர். இதனால் புதனன்று நடக்கவிருந்த திறந்தவெளி வாசிப்பு இயக்க போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.