நாகர்கோவில், மே 11- வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற மக்களை கடுமையாக பாதிக்கும் பிரச்சனைகளை திசை திருப்ப ஒன்றிய அரசு மதவாதத்தை பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக சிஐடியு மாநில பொது செயலாளர் ஜி.சுகுமாறன் குற்றம்சாட்டினார். கன்னியாகுமரியில் நடந்த சிஐடியு மாநில மாநாட்டு முடிவின் அடிப்படையில் தமிழகத்தின் ஏழு முனைகளிலிருந்து நடைபயணம் துவங்கி மே 30- ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்டமான அணிவகுப்போடும், மாபெரும் பொதுக்கூட்டத்தோடும் நிறைவடைய உள்ளது. அதன் ஒரு பகுதியாக, களியக்காவிளையிலிருந்து திருச்சி வரையான நடைபயணம் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிஐடியு குமரி மாவட்டக்குழு அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஜி.சுகுமாறன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: வருமானத்திற்கு வழியாய் இருக்கிற வேலைவாய்ப்பு சுருங்கும்போது துயரம் இரட்டிப்பாகிறது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பதும், இயற்கை வளங்கள் கனிமவளங்கள் சூறையாடப்படுவதும் அரங்கேறி வருகிறது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 4 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. மோடி அரசு நவீன தாராளமய கொள்கையை அமல்படுத்துகிறது. தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் மறுக்கப்படுகிறது. புதிய தொழிற்சாலைகளில் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் காண்ட்ராக்ட், கேசுவல் குறிப்பிட்ட கால வேலை, நீம் என்ற பெயரில் பெரும் உழைப்பு கொள்ளை நடக்கிறது. எந்த சட்டமும் இங்கு நுழைவதில்லை. இதுபோன்ற தொழிலாளர் விரோத மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக திருச்சியில் வரும் 30-ஆம் தேதி தொழிலாளர் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக வருகிற 20-ஆம் தேதி களியக்காவிளையில் இருந்து பிரச்சார பயணம் தொடங்குகிறது என்றார். செய்தியாளர் சந்திப்பின் போது சிஐடியு மாவட்டத் தலைவர் சிங்காரன், செயலாளர் தங்க மோகன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக சிஜடியுவின் புதுப்பிக்கப்பட்ட அலுவலக கட்டிடத்தை மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன் திறந்து வைத்தார்.