ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 21 வயது பழங்குடியினப் பெண் ஒருவரை அவரது மாமியார் நிர்வாணப்படுத்தி தாக்குதலுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளார். தகவலறிந்த போலீசார் பெண்ணை மீட்டு, மாமியார், கணவர் என 9 பேரை கைது செய்து, 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்,ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,”பிரதாப்கர் மாவட்ட சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு ஏடிஜியை தலைமையில் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை. குற்றவாளிகள் விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு விரைவு நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்படுவார்கள்” என கூறியுள்ளார்.