ஒட்டன்சத்திரம், செப்.19- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையத்தில் நான்கு வழிச் சாலையை கடக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருவதால் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையத்தில் புங்கவலசு கிராமத்திற்கு செல்லும் சாலையில் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும். அதே போல நோயாளிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் செல்வதற்கு ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலை கடந்து செல்லவேண்டும். இந்த நான்கு வழிச்சாலையில் 24 மணி நேரமும் பேருந்து, லாரி, வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வருவதால் சாலையை உயிரை கையில் பிடித்துக்கொண்டு மாணவ, மாணவிகள் மற்றும் நோயாளிகள் கடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் வழியில் நான்கு வழிச்சாலை ஓரத்தில் தனியார் கடை ஆக்கிரமிப்பு செய்து பந்தல் அமைக்கப்பட்டிருப்பதால் நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் தெரியாததால் பெரும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அல்லது தரைப் பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும், தனியார் கடை பந்தல் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.