districts

பணியின் போது மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை

சிவகங்கை  ஆட்சியர் எச்சரிக்கை சிவகங்கை, செப்.14- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பிரிவு, கழிவறை, சமையலறை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும், உறவினர்களிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘காய்ச்சல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி பொதுமக்களிடையே சுகாதார துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழை காலத்திற்கு ஏற்ப தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.  தேவையான மருத்துவர்களை நியமிக்க அரசிற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், விரைவில் உரிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும் நோயின் தீவிரம் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை பொறுத்து தேவைக்கு ஏற்ப கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  அரசு மருத்துவமனையில் பணியின் போது மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தால், தீவிர விசாரணை மேற்கொண்டு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.