திருநெல்வேலி, டிச. 27- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களாக மாநகர், புறநகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாநகர பகுதியை பொறுத்தவரை பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு விட்டு விட்டு மழை பெய்து வந்தது. தொடர்ந்து சாரல்மழை பெய்தது. ஒருசில இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழையால் மாநகர பகுதியில் உள்ள தொண்டர் சன்னதி, நயினார்குளம் சாலைகள் பள்ளங்களாக காட்சியளித்தது. அதில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்வதால் காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 300 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டு இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து 1994 கனஅடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 100 அடியை கடந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 90 அடியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது, மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 5.8 சென்டிமீட்டரும், பாபநாசத்தில் 4.7 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பை, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, களக்காடு, சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.