districts

img

கல்லறை தோட்டத்திற்குள் புகுந்த கழிவு நீர் மூதாட்டி சடலத்துடன் உறவினர்கள் மறியல்

திண்டுக்கல், செப்.22- திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்திற்குள் கழிவு நீர் புகுந்ததையடுத்து மூதாட்டியின் உடலை புதைக்க முடியாமல் தவித்த உறவினர்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.  திண்டுக்கல் குடை பாறைப்பட்டி அந்தோணியார் தெரு அருகே கல்லறை தோட்டம் உள்ளது. இந்த கல்லறை தோட்டத்தில் தோமையார்புரம், சவேரியார்பாளையம்,  ஏ.பி.நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.  இந்நிலையில், சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த 74 வயது  மூதாட்டி செபஸ்தியம்மாள் இறந்து விட்டார்.  இதனையடுத்து வத்தலக்குண்டு சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மூதாட்டியின் உறவினர்கள் உடல் கொண்டு வந்துள்ளனர். ஆனால் கல்லறை தோட்டத்தில் கழிவு நீர் தேங்கி நின்றதோடு, உள்ளே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் செபஸ்தியம்மாள் உடலை வைத்து வத்தலக்குண்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் தெற்கு காவல், வருவாய் துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.