கருவேல் மரங்களை அகற்றி விவசாயத்திற்கான தண்ணீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீரபாண்டி வலியுறுத்தினார். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் வீரபாண்டி, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் பேசினர். மானாமதுரை சுப்பன் கால்வாய் பல கோடி ரூபாய் செல வில் உருவானது.அந்த சுப்பன் கால்வாயை மேம்படுத்த வேண்டும்.வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று வீரபாண்டி பேசினார். சிவகங்கை மாவட்டத்தில் 2.46 லட்சம் மாடுகள் வளர்க்கப்படுகின்றன.இதில் 1500 பசுக்களுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது என கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன் தெரிவித்தார். திருப்பத்தூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப் பட்ட கடைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துராமலிங்கம் பேசினார்.