நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை உயர்ந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்
தேனி, ஜூலை 25- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரண மாக முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து 1092 கன அடியாக உயர்ந்து நீர்மட்டம் 120 .40 அடியை தாண்டி யது. கடந்த 11 ஆம் தேதி அதிகபட்சமாக முல்லைப் பெரி யாறு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. அவ்வப்போது லேசான மழை பெய்த போதும் அணைக்கு நீர்வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. அதே வேளை யில் பாசனத்துக்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 5 நாட்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி யான இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திங்களன்று அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக இருந்தது. செவ்வாய்க்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 1092 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2707 மி.கன அடியாக உள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் 49.31 அடி யாக உள்ளது. நீர்வரத்து இல்லாத நிலையில் குடி நீருக்காக மட்டும் 69 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1903 மில்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 76.62 அடியாகவும் உள்ளது. மழையளவு பெரியாறு 20.6, தேக்கடி 14.4, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 1.4, சண்முகா நதி அணை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
தடை செய்த நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை
விருதுநகர், ஜூலை 25- தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும், பயன்படுத்தும் மற்றும் சேமித்து வைக்கும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி யதாவது: நெகிழிப் பொருட்களினால் உயிரினத்திற்கும் சுற்றுப் புறத்திற்கும் ஏராளமான தீமைகள் ஏற்படுகின்றன. எனவே, இதனை கருத்தில் கொண்டு, ஒருமுறை மட்டும் பயன் படுத்தி விட்டு தூக்கி எறியும் நெகிழிப் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் சேமித்தல் ஆகியவற்றைத் தடைசெய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டு உபயோ கத்திற்கும் மற்றும் கோவில்களில் பூஜை பொருட்களை பயன்படுத்துவதற்கும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். அதற்கு மாற்றாக மஞ்சப் பையைப் பயன்படுத்த வேண்டும். மேலும், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும், பயன்படுத்தும் மற்றும் சேமித்து வைக்கும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 பெண் தொழிலாளர்கள் பலி
வெம்பக்கோட்டை, ஜூலை 25- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வெம்பக்கோட்டை அருகே உள்ளது தாயில்பட்டி. இங்கு, சண்முகையா என்பவருக்கு சொந்தமான ஆர்.எஸ். ஆர். கேப் வெடி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் செவ்வாயன்று காலையில் வழக்கம் போல் வேலை செய்து கொண்டி ருந்தனர். அப்போது, வேதிப் பொருளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பானு , முருகேஸ்வரி ஆகிய இரண்டு பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வேறு பகுதிக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
போடியில் கைத்துப்பாக்கி கண்டெடுப்பு
தேனி , ஜூலை 25- தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் தெய்வம் (37). இவர் பட்டுக் கோட்டையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து குடும்பத்துடன் அங்கு வசித்து வந்துள்ளார். இந்த நிலை யில் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சொந்த ஊரான போடிக்கு குடிவந்துள்ளார். திங்கள் கிழமை இரவு சிறு நீர் கழிக்க வீட்டருகே ரயில்வே சுரங்கப்பாதைக்காக ஜேசிபி மூலம் தோண்டப்பட்ட பள்ளத்திற்கு சென் றுள்ளார். அப்போது அங்கு துருப்பிடித்த நிலையில் ஒரு கைத்துப்பாக்கி கிடந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்தவர் மழை பெய்ததால் வீட்டுக்கு கொண்டு வந்து வைத்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலையில் போடி நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு புகார் செய்துள்ளார். இதுகுறித்து போடி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைத்துப் பாக்கி எப்படி வந்தது, சட்டவிரோதமாக பயன்படுத்தி விட்டு புதைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வரு கின்றனர்.
விருதுநகரில் நியோமேக்ஸ் அலுவலகத்தில் போலீசார் சோதனை
விருதுநகர், ஜூலை.25- விருதநகரில் நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்த மான ஆரோ சிட்ஸ் அலுவலகத்தில் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் பல மணி நேரம் சோதனை நடத்தினர். முடிவில், அங்கிருந்த கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறு வனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் அதிக வட்டி தருவதாகவும் அறிவிக்கப் பட்டது. இதையடுத்து, ஏராளமானோர் அந்நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் அந்நிறுவனம் ஈடுபட்டதாக சிலர் மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதில் 4 பேரை கைது செய்தனர். இந்தநிலையில், விருதுநகரில் விருதுநகர் -சாத்தூர் சாலையில் கருமாதி மடம் அருகில் நியோமேக்ஸ் நிறு வனத்திற்கு சொந்தமான ஆரோ சிட்ஸ் நிறுவனம் உள்ளது. அங்கு வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4மணி நேரம் சோதனை நடத்திய சோதனையின் முடிவில் அந்த அலு வலகத்தில் இருந்த கம்யூட்டர், ஹார்டு டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றனர்.
திண்டுக்கல் தோல்ஷாப்பில் விஷவாயு தாக்கி 4 பேர் பாதிப்பு
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
திண்டுக்கல், ஜுலை 25- திண்டுக்கல் அருகே தனியார் தோல் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் உட்பட 4 பேர் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி அளவில் ஒரு கண்டெய்னரை திறந்த போது அதிலிருந்து சல்பர் டை ஆக்சைடு வெளியேறியது. இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹாசன், மற்றும் சுரேந்திரன், சீமோன், ராமச்சந்திரன் ஆகியோரை விஷவாயு தாக்கியது. நான்கு பேரும் மயக்கமடைந்தனர். சுரேந்திரன் தனியார் மருத்துவமனையிலும் மற்ற மூவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இதில் மேற்கு வங்க தொழிலாளி ஹாசன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 2 தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்று உடனடியாக டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தேனியில் நாளை மாற்றுத்திறனாளிகள் முகாம்
தேனி, ஜூலை 25- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் தேனியில் வியாழனன்று நடைபெறும் என பெரியகுளம் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார் . பெரியகுளம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களில், வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக மாதம் ஒருமுறை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் ஜூலை 27 அன்று தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் , பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தேனி வட்டார பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனு வினை கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.