districts

img

சமகால பிரச்சனைகளில் முஸ்லீம் லீக்கின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது: எம்.வி.கோவிந்தன்

கோழிக்கோடு, டிச.11- சமகால பிரச்சனைகளில் கேரள முஸ்லிம் லீக் எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார். மதச்சார்பற்ற உள்ளடக்கத்து டன் கூடிய பிரச்சனைகளையே முஸ்லிம் லீக் கையாண்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இருந்தபோதும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க முஸ்லீம் லீக்கால் முடிந்தது. அவர்களால் காங்கிரஸை சரியான நிலைக்கு கொண்டு செல்லவும் முடிந்தது. இது வரவேற்கத் தக்கது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  “கேரளாவில் கம்யூனிஸ்டுகள்தான் முக்கிய எதிரி என்கிறது காங்கிரஸ். பல்கலைக் கழகங்களை காவி மயமாக்கும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை ஆளுநர் முன்வைத்தபோது, அதை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டை கேரள காங்கிரஸ் எடுத்தது. ஆளுநருக்கு எதிரான மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவரே கூறினார். ஆனால், சட்டமன்றத்தில் வேறு அணுகுமுறையை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. மசோதாவை ஆதரிக்க வேண்டும் என முஸ்லீம் லீக்கும் ஆர்எஸ்பியும் எடுத்த நிலைப்பாடுதான் அதற்கு வழிவகுத்தது. விழிஞ்ஞத்தில் தூண்டிவிடப்பட்ட போராட்டத்தை முஸ்லீம் லீக் எதிர்த்தது. ஆனால், கலவரம் போன்ற சூழல் நிலவியபோது, கலங்கிய நீரில் மீன்பிடிக்க மாநில காங்கிரஸ் முயன்றது. ஒற்றை சிவில் உரிமை பிரச்சனையிலும் இது தெளிவாகத் தெரிந்தது. முஸ்லீம் லீக் விமர்சித்தபோது, காங்கிரஸ் அதற்கு எதிராக குரல் எழுப்பியது. கேரளத்தில், இடது ஜனநாயக முன்னணி துல்லியமான அரசியல் கொள்கையை முன்வைத்து செயல்பட்டு வருகிறது. வலதுசாரி அரசியல் அணுகுமுறையை கைவிட்டு வரும் எவரையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோம்’’ என்றும் கோவிந்தன் கூறினார்.