districts

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை எளிதாக பெறுவது எப்படி: ஆட்சியர் விளக்கம்

நாகர்கோவில், பிப்.11 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து துறைசார் அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற 4,499 மாணவ, மாணவிகள், புதுப்பித்தலுக்கு 2,156 மாணவ, மாணவியர் புதிதாக விண்ணப்பிக்கவும் தகுதியுடையவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற  tn.adtwo.gov.in.index.php எனும் இணையத்தின் மூலம் கல்லூரிகள் முதலில் தங்களது குறிப்புகளை உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். இப் பதிவேற்றத்திற்குக் கல்லூரிகளுக்கு AISHE Code மிக அவசியம். பின்னர் மாணவர்கள் தங்கள் ஆதார் மூலம் தங்கள் சுய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்படி பதிவேற்றம் நிறைவு பெற்றால் மட்டுமே மாணவர்கள் கல்வி உதவித்தொகையை ஒன்றிய-மாநில அரசுகளின் மூலம் பெற இயலும்.  மாவட்டத்தில் உள்ள மொத்தம் 6,655 மாணவர்களில் இதுவரை 339 பேர் மட்டுமே முழுமையாகப் பதிவு செய்துள்ளனர் என்றார் மேலும்,  ஒன்றிய, மாநில அரசுகளின் உதவித்தொகையை மாணவ, மாணவிகளுக்கு தங்கு தடையின்றி வழங்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்றார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.