districts

img

தனியார் நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க கோரி மீனவர் சங்கத்தினர் மனு

இராமநாதபுரம், அக்.11- இராமநாதபுரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த செல்வி கோல்டு பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மீனவர், மீனவ பெண்கள் தங்களது நகைகளை அடகு வைத்திருந்தனர்.  இந்நிலையில், நகை அடகு வைத்தவர்களில் கணிசமானோர் தாங்கள் வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்தியும் நகைகள் கிடைக்கவில்லை. இதனால், இராமநாதபுரம்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி, மாவட்டத் தலைவர் எஸ்.கே.கணேசன் ஆகியோர் தலைமையில் நேரில் சந்தித்து தங்கள் நகையை மீட்டுத் தரக் கோரி மனுக்கள் அளித்தனர். இது தொடர்பாக ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த மனுக்கள் மீதான நடவடிக்கை மிகவும் தாமத நிலையில் இருப்பதை துரிதப்படுத்திட வேண்டும், மதுரை உயர்நீதிமன்றம் அங்குள்ள சமரச தீர்வு மையத்தின் (மீடியேசன் சென்டர்) மூலமாக நகைகளை காலதாமதமின்றி பிரித்து கொடுக்க பரிந்துரை செய்திருந்தும் இது விசயத்தில் உரிய தலையீடு செய்ய வேண்டிய காவல்துறை மட்டும் நீதித்துறை நிர்வாகங்கள் போதிய கவனம் செலுத்த தவறியது.  எனவே சமரச தீர்வு மையத்தை இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்திலோ அல்லது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்திலோ நீதிமன்ற மூலமாக ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரினர். இதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.