நாகர்கோவில், டிச. 4- கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் சனிக்கிழமையன்று (டிச.4) பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை 2 நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில், வெள்ளியன்று மாவட்டத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதே போல அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளிலும் கன மழை பெய்தது. சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக நாகர்கோவில் பகுதியில் 42 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. பூதப்பாண்டி-1.4, பேச்சிப்பாறை-14.4, பெருஞ்சாணி-5.4, புத்தன்அணை- 4.8, சுருளகோடு-7, தக்கலை-5, பாலமோர்-5.4, மாம்பழத்துறையாறு- 27, கோழிபோர்விளை-6, அடையாமடை-38, முள்ளம்கினாவிளை-7.4, ஆனைக்கிடங்கு-32.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.