நாகர்கோவில், மே 15- கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான காலநிலை உள்ளது. சனியன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது. பேச்சிப்பாறை, சிற்றார், பெருஞ்சாணி போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.10 அடியாக உள்ளது. அணைக்கு 230 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 16.57 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 18 அடியாகவும், சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 9.97 அடியாகவும், சிற்றார்2 அணையின் நீர்மட்டம் 10.7 அடியாகவும் உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் சனியன்று இரவு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் ஞாயிறன்று காலை அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. விடுமுறை தினமான ஞாயிறன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது மழை விட்டு விட்டு பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவி வருகிறது. திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிறன்று பிற்பகல் முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் சூரியோதத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அங்கு காலை மழை பெய்ததையடுத்து சூரியோதத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மழையளவு பேச்சிப்பாறை 62.2 மி.மீட்டர், பெருஞ்சாணி 26.6, சிற்றாறு 11.2, சிற்றாறு 264, மாம்பழத்துறையாறு 24, புத்தன் அணை 25.8, நாகர்கோவில் 12.4, இரணியல் 11.2, குளச்சல் 14.6, சுருளோடு 39.4, கன்னிமார் 4.8, பூதப்பாண்டி 16.6, மயிலாடி 4.6, கொட்டாரம் 2.4, நிலப்பாறை 2, பாலமோர் 60.6, அடையாமடை 11, ஆணைக்கிடங்கு 23.2, திற்பரப்பு 55.4, குருந்தன்கோடு 25.2, ஆரல்வாய்மொழி 8, கோழிப்போர்விளை 22, முள்ளாங்கினாவிளை 28.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.