districts

img

குமரிக்கு பாதுகாப்புடன் வந்த ஓட்டுப் பதிவு இயந்திரங்கள்

நாகர்கோவில், பிப்.18- கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,324 வாக்குச் சாவடிகளுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் வெள்ளியன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டுவரப்பட்டன. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப் பதிவு பிப்ரவரி 19 காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இறுதி 1 மணி நேரம் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு பிறகு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படும்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குழித்துறை, பத்மநாபபுரம், குளச்சல், கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.  இதில், நாகர்கோவில் மாநகராட்சியில் 233 வாக்குச் சாவடிகளில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 531 வாக்காளர்களும், 4 நகராட்சிகளிலும் சேர்த்து 140 வாக்குச் சாவடிகளில் 1 லட்சத்து 731 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.  மாவ‌ட்டத்திலுள்ள 51 பேரூராட்சிகளில் 828 வார்டுகளில் 951 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6,71,687 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 1,324 வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 192 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் சுமார் 6 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பிப்ரவரி 18 தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டது.  அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகள் அனைத்தும் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்றன.