திண்டுக்கல், ஜுலை 30- தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை அடுத்துள்ள கிராமம் பாறைப்பட்டி. இங்கு முற்றிலும் அழிந்து போன பாண்டியர் கால கோவில் எச்சங்களும், சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, தென்பொதிகை குடும்பன் ஆகியோர் இதனை கண்டறிந்துள்ளனர். இந்த கல்வெட்டு குறித்து அவர்கள் கூறியதாவது. இந்த பாறைப்பட்டியில் முற்றிலும் அழிந்து போன சிவன் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. அழிந்து போன இந்த கோவிலில் அருகேயுள்ள பாறை சரிவில் 35 வரிகளுடன் கூடிய ஒரு கல்வெட்டும் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டும் சிதைந்து போயுள்ளது. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 4ம் ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி. 1243ம் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு அங்கிருந்த கோவிலை குணமாலை ஈசுவரமுடைய நாயனார் கோவில் என்று குறிப்பிடுகிறது.
இக்கோவிலின் திருவாசல் அழிந்து போனதால் மீண்டும் திருவாசல் எடுப்பித்து கோவிலில் திருவிளக்கு போட நிலம் கொடையளித்த செய்தி நிலத்தின் நான்கு எல்லைகளுடன் பொறிக்கப்பட்டுள்ளது. பரதேசி ஆரிய பிராமணரில் அழகதேவ வாள்வல்ல பெருமாள் மற்றும் குலசேகர மூவேந்த வேளாண் ஆகியோர் இக்கொடையை அளித்துள்ளனர். கொடை அளிக்கப்பட்ட நிலத்திற்கு கடமை உலவை உள்ளிட்ட வரிகளை நீக்கி ஊராரும் ஏற்பாடு செய்துள்ளனர். கல்வெட்டின் இறுதியில் உமையான், மூவேந்த வேளாண் உள்ளிட்ட சிலர் கையெழுதது இட்டுள்ளனர். அழிந்து போன சிவன் கோவிலை 13ம் நூற்றாண்டில் புதுப்பித்த போதும், அக்கோவில் மீண்டும் சிதைந்து தற்போது இருந்த இடம் தெரியாமல் முற்றிலும் அழிந்து போனதன் காரணம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். பரதேசி ஆரியர் தமிழ்சமூகத்தில் ஆரியர்கள் வேறு பிராமணர்கள் வேறு என்று வாதிடுகிறவர்கள் உள்ளனர். ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்றும், இங்கே இருந்தவர்கள் பிராமணர்கள் என்றும் வாதிடுகிறார்கள். ஆனால் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் இந்த கல்வெட்டு ஒரு பிராமணரை பரதேசி என்றும், ஆரியர் பிராமணர் என்றும் குறிப்பிடுகிறது. பரதேசி என்றால் தேசாந்திரியாக சுற்றித் திரிபவர்கள். அப்படி வடபுலத்திலிருந்து தமிழகத்தில் வந்த ஆரியரை பரதேசி ஆரிய பிராமணரில் அழகதேவ வாளவல்ல பெருமாள் என்று வர்ணிக்கிறது இந்த கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.