புதுக்கோட்டை, ஜன.15 - புதுக்கோட்டை மாவட்டம் செரியலூர் கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காயோடு தேங்காய் மோதி உடைக்கும் போர்த்தேங்காய் போட்டி சனிக்கிழமையன்று நடைபெற்றது. தைத் திருநாளை தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையாக 3 நாட்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாட்களில் கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில் தமிழகம் எங்கும் மாடுகளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதாவது எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர். இதுவரை அனைத்து ஊர்களிலும் யார் வேண்டுமானாலும் விரும்பியவர்களின் தேங்காய்களுடன் மோதிக் கொண்டு உடையும் தேங்காயை எடுத்துச் செல்லும் விளையாட்டு நடந்தது.