பெரம்பலூர், நவ.25- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 28 அன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். பின்னர்,நவம்பர் 29 அன்று அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் நடைபெறும் அரசு விழாவில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்க உள்ளார். இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ள பகுதிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ.வெங்கட பிரியா, சிப்காட் நிர்வாக இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் சி.இராஜேந்திரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.