districts

img

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது போக்சோ வழக்கு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டுகளூர்கேட் பகுதியில் செயல்படும் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் கல்லூரியில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணிபுரியும் சுந்தரமூர்த்தி என்பவர் முதலாம் ஆண்டு மாணவிகள் நான்கு பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது ...

ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 27-ம் தேதி பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கம்(SFI)  சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பேராசிரியர் சுந்தரமூர்த்தி தலைமறைவாகி வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ராசிபுரம் அரசு கலைக் கல்லூரி மாணவி பாலியல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி  அந்த ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்களோ  என்ற அச்சம் எழுகிறது. இதனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

மேலும், காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைது செய்ய வேண்டும்.

கல்வித்துறை அதிகாரிகள் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேராசிரியரை உடனடியாக கைது செய்யவில்லை என்றால், வருகின்ற மே 2-ஆம் தேதி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என  அனைவரையும் ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவமானது ராசிபுரம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.