கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சேலூர் நாடு ஊர்முடிபட்டி கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் இ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார் .
போராட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தங்கராஜ் ஒன்றிய தலைவர் எஸ்.கே.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தை கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் வி.கே.வெள்ளைச்சாமி துவக்கி வைத்தார் .
போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏடி கண்ணன் கண்டன உரையாற்றினார் .
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் சேலூர் நாடு ஊர்முடிபட்டி மற்றும் அதன் சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கிராமங்களுக்கு பிரதான சாலையாக இருப்பது வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிபட்டி வரை செல்லும் கிராம சாலையாகும்.
இது செம்மேடு முதல் வெண்கலபாடி வரை செல்லக்கூடிய பிரதான சாலையை இணைகிறது .
இச்சாலை கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளது.
தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட அந்த சாலை மிகவும் மோசமான முறையில் தற்பொழுது பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது .
இதனால் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்குள் வர முடியாமல் நிலை உள்ளது.
குண்டும் குழியுமான உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லக்கூடியவர்கள் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து வந்திருக்கின்றனர்.
இது தொடர்பாக ஊர் பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு அமைப்பினர் சார்பிலும் பலமுறை மாவட்ட ஆட்சியர் ,விவசாயிகள், குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஜமாதி, கிராம சபை கூட்டம் ,வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை நேரிலும், எழுத்துப்பூர்வமாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேற்கண்ட சாலையை உடனடியாக செப்பனிட்டு தார் ஊற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சேலூர் நாடு ஊர்முடிபட்டி கிராம மக்கள் இன்று கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாத்திரங்கள், விறகு, பாய் படுக்கையுடன் சமைத்து சாப்பிட்டு சாலை கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலர் (கிராம ஊராட்சி)தனசேகரன் காவல்துறை உதவி ஆய்வாளர், சுப்பிரமணி தனி உளவுப்பிரிவு, தலைமை காவலர் கணேசன், எஸ்பிசிஐடி காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.