நாகர்கோவில், ஜூலை 18- ஆடிவெள்ளியை ஒட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் குமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்தும் ஓசூர் போன்ற வெளியூர்களில் இருந்தும் அதிக அளவில் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. குமரி மாவட்டம் மற்றும் அருகில் உள்ள கேரளத்தில் இருந்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். திருமணம், பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். பூக்கள் வரத்து அதிகரித்துள்ள போதிலும் தேவையும் அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜூலை 19 அன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் பூக்களை வாங்க வியாபாரிகள் சந்தையில் குவிந்துள்ளனர். மல்லிகைப்பூ கிலோ ரூ.400க்கும், பிச்சிப் பூ கிலோ ரூ.250 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரளிப்பூ கிலோ ரூ.120, கனகாம்பரம் ரூ.125, வாடாமல்லி ரூ.40, சிவப்பு கேந்தி ரூ.60 ரூபாய்க்கும், சம்பங்கி ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.