வேதாரண்யம் அருகே ஒருமாத காலமாக குடிநீர் வழங்கவில்லை என ஊர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பிராந்தியங்கரை ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் குடிநீர் வசதி சரிவர வழங்கவில்லை என பொதுமக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்ட வந்த நிலையில் தற்போது ஒரு மாத காலமாக இப்பகுதியில் குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கர் மற்றும் கரியாப்பட்டினம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் போராட்டம் தாற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.