நாகப்பட்டினம், டிச. 25 - வர்க்கப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும், கீழவெண்மணி தியாகிகளின் 55-ஆவது வீரவணக்க நாள் திங்களன்று மிகுந்த நெகிழ்ச்சியுடனும், உணர்ச்சிகரமாகவும் நடை பெற்றது.
அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக வும், உயிரையே விட்டாலும், சாதிய பண்ணையடிமைத் தனத்திலிருந்து மீட்டு, தங்களுக்கு சுயமரியாதையான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த செங்கொடியை கீழே இறக்க மாட்டோம் என்று உறுதியுடன் முழங்கி யதற்காகவும் 1968 டிசம்பர் 25 அன்று, நாகப்பட்டினம் மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் நிலப்பிரபுத்துவ பண்ணை யார்கள் 44 பேரை உயிரோடு எரித்துப் படுகொலை செய்தனர். 2 கர்ப்பிணிகள் உட்பட 20 பெண்கள், 19 குழந்தைகள், 5 ஆண்கள் என 44 பேர் சாம்பலாக்கப்பட்ட கொடூரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
எனினும், இந்த தியாகமே, இன்றுவரை நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கு, உழைக்கும் மக்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாக- வர்க்கப் போராட்டத்தின் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெண்மணித் தியாகிகள் நாளை ஒவ்வொரு ஆண்டும் உணர்வுப்பூர்வமாக கடைப்பிடித்து வருகிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமை நாளாகவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில், வெண்மணி தியாகிகளின் 55-ஆவது வீரவணக்க நாள், கீழவெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் திங்களன்று நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உழைக்கும் மக்களின் ஒப்பற்ற கொடியான செங்கொடியை ஏற்றி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை விவசாய தொழிலாளர் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி. சுகுமாரன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், விதொச மாநில பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம், விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், மூத்த தலைவர் என். சீனிவாசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
வர்க்கப் போரில் உயிர்நீத்த 44 தியாகி களை நினைவுபடுத்தும் வகையில், சிஐடியு சார்பில் 44 நெல் மூட்டைகள் வழங்கப்பட்டன.