districts

img

நாகை: மழைக்கால நிவாரணம் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை

வேதாரண்யம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் மழைக்கால நிவாரணம் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் கரியாப்பட்டினம், தரகமருதூர், செட்டிபுலம், செம்போடை பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல தலைமுறைகளாக மின் மோட்டார்கள் உதவி இல்லாமல் மர சக்கரத்தை வைத்து கையால் மண்பாண்ட பொருட்கள் செய்து வருகின்றனர். மேலும் மண்பாண்டம் செய்ய பயன்படுத்தும் மண் எடுப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதால் ஒரு லோடு வேன் களிமண் ரூபாய் 4000 முதல் 7500 ரூபாய் வரை வாங்கி மண்பாண்டங்களை செய்கின்றனர்.  

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான சட்டிபானை அடுப்புகள் தயார் செய்து வந்த நிலையில் தொடர் மழையால் இந்த ஆண்டு 500க்கும் மேற்பட்ட பானை சட்டி அடுப்புகள் தயார் செய்து வருகின்றனர்.  மேலும் தொடர் மழை காரணமாக மண்பானை மற்றும் அடுப்பு உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மண்பாண்டங்கள் செய்து சுடுவதற்கு சரியான சூளை வசதி கூட இல்லை.

இந்த நிலையில் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் தொழிலாளர்கள் மின்மோட்டார் வைத்து சட்டி பானைகளை செய்ய வசதி இல்லாமல் மர சக்கரம் வைத்து மண்பாண்ட பொருட்களை தயாரித்து வருகின்றன. இதனால் அதிக அளவில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்ய முடியவில்லை. மண்பானைகள் ரூபாய் 50 அல்லது 65 ரூபாய் என்ற விலைக்கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இது கூலிக்கு கூட கட்டுப்பாடு ஆகவில்லை. பொங்கல் பண்டிகைக்கு மண்பானை மற்றும் அடுப்பு விற்பனை அமோகமாக இருக்கும் என நினைத்து உற்பத்தி தொடங்கிய நிலையில் மழையால் மண்பானை தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.  

எனவே அரசு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வங்கி கடன் கொடுத்து உதவினால் மின் மோட்டார் பொருத்தி மண்பாண்டங்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவோம் என மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.