நாகப்பட்டினம், மே 3- நாகப்பட்டினம் நகரத்தில் இயங்கி வந்த அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவை தொடர்ந்து நடத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் நகரத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தபோது, தஞ்சை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி செயல்பாட்டிற்கு வந்த பிறகு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக இம்மருத்துவனை செயல்பட்டு வந்தது. பின்னர் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் பிரிந்த பிறகும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக இது செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் ஒரத்தூர் ஊராட்சியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு, கடந்த 23.4.2024 அன்று பொதுமக்கள் செயல்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாகை நகரத்தில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையின் அனைத்து வசதிகளும் (மகப்பேறு மற்றும் குழந்தை நலம் நீங்கலாக) புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை மாற்றப்பட்டது, நாகை நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பேருந்து நிலையத்தின் அருகிலேயே அரசு மருத்துவமனை இருந்ததால், நோயாளிகள் எளிதில் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது கட்டப்பட்டிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போக்குவரத்து வசதிகள் அற்ற பகுதியில் இருக்கிறது- இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நாகை புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையாக விளங்கிய அந்த மருத்துவமனையில், ஏற்கனவே செயல்பட்டு வந்தது போன்று தீவிர சிகிச்சை பிரிவும், அதற்கான உள்நோயாளிகள் பிரிவும் இயங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு மருத்துவமனை வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நாகை நகரச் செயலாளர் க.வெங்கடேசன் தலைமை வகித்தார். நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. சுப்பிரமணியன், எம்.முருகையன், ப.சுபாஷ் சந்திரபோஸ், என்.எம்.அபுபக்கர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு பொதுநல அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் ஆதரவு அளித்தன. கட்சியின் நாகப்பட்டினம் நகரக் குழு, நாகை தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய குழுக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தன.