நாகப்பட்டினம், பிப்.2- நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணி கட்சியோடு இணைந்து 4 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரம், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, கீழ்வேளூர் ஆகிய பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நாகை நகரம் கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டு என்கிற அடிப்படையில் 4-வார்டுகள் ஒதுக்கப்பட்டன. இந்த பேச்சு வார்த்தையின்போது, சிபிஎம் மாவட்ட செயலாளர் வீ.மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பி.நாகைமாலி, திமுக மாவட்ட செயலாளர் என். கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் நகரத்தில் 32-வது வார்டு, வேளாங்கண்ணி பேரூராட்சியில் 13-வது வார்டு, கீழ்வேளூர் பேரூராட்சியில் 5-வது வார்டு, தலைஞாயிறு பேரூராட்சியில் 12-வது வார்டுகளிலும் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.