தேனி, ஜூன் 26 - நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் நீர் வரத்து அதிகரித்து பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடிக்கு மேல் உயர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செவ்வாயன்று வினாடிக்கு 2001 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 3759 கனஅடியாக அதிகரித்தது. இதனால் செவ்வாயன்று 118.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் புதன்கிழமை மதியம் 3 மணி அளவில் 2 அடிக்கு மேல் அதிகரித்து 120.60 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3759 கனஅடியாகவும், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 967 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணை யின் நீர் இருப்பு 2765 மில்லியன் கன அடியாக உள்ளது. 71 அடி உயரமுள்ள வைகையின் நீர்மட்டம் 47.87 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 556 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 69 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 1726 மில்லியன் கன அடியாக உள்ளது.
126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.32 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 94.65 மில்லியன் கனஅடியாக உள்ளது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 46 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 46 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 435.32 மில்லியன் கனஅடியாக உள்ளது.