தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் முருகன். சங்கரன்கோவிலில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான பிரச்சனையில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முருகனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, மாவட்ட செயலாளர் உ.முத்துப்பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.உச்சிமாகாளி, அசோக்ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் நடராஜன், கருப்பசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இச்சம்பவத்தைக் கண்டித்து சங்கரன் கோவிலில் பிப்ரவரி 11 அன்று கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.