திருவாரூர், ஜன.8 - திருவாரூர் நகராட்சி ஏழாவது வார்டு (பழைய நான்காவது வார்டு) நல்லப்பா நகர் செல்லும் பொது சாலையில் உள்ள மின் கம்பத்தை விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அகற்ற வேண்டுமென நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கண்ட நல்லப்பா நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் 150-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு செல்வதற்கு துர்காலயா சாலையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகள் வழியாக பொதுப்பாதை ஒன்று உள்ளது. இந்த பாதையை மறித்து தனிமனிதர் ஒருவர் சுவர் ஒன்றை எழுப்பியுள்ளார். நீண்ட காலமாக அந்த ஆக்கிரமிப்பு சுவற்றின் காரணமாக பொதுமக்கள், நகரவாசிகள் பாதிப்படைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நகர்மன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்த ஜி.வரதராஜன் என்பவர் இந்த சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார். அப்போது இதுகுறித்து “தீக்கதிர் நாளிதழில்” விரிவான செய்தி கட்டுரை வெளியிடப்பட்டு இப்பகுதி முழுவதும் பத்திரிகை விநியோகம் செய்யப்பட்டது. இந்த செய்தி தீக்கதிரின் அனைத்து பதிப்பிலும் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக அன்றைய ஆட்சியாளர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த நடராஜனுக்கு, இந்த இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தனர்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் நடராஜன், திருவாரூர் நகராட்சி ஊழியர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு ,தனியாரின் ஆக்கிரமிப்பினை உறுதி செய்து ஆக்கிரமிப்பு சுவற்றை இடித்து அப்புறப்படுத்தினர். இதனை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இன்றுவரை இந்த பொதுச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இடையூறும் ஆபத்தும் அதே நேரத்தில் ஏற்கனவே அந்த இடத்தில் மின் கம்பத்தை இணைத்து சுவர் கட்டப்பட்டிருந்த நிலையில், சுவர் அகற்றப்பட்டதே தவிர மின்கம்பம் அகற்றப்படவில்லை. இதன் காரணமாக வாகன போக்குவரத்து சிரமத்திற்கு ஆளாகிறது. தற்போதைய கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் அவசர ஊர்திகள் செல்ல முடியவில்லை. இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இந்த இடையூறும் அதனால் உருவாகவுள்ள ஆபத்தும் தொடர்கிறது.
மழைக் காலங்களில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள், கால்நடைகள் பாதிப்பு போன்றவை நிகழும் என்ற அச்சமும் இப்பகுதி மக்களிடம் உள்ளது. இதற்காக தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்தும் மின் கம்பம் அகற்றப்படவில்லை. முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஜி.வரதராஜன் தொடர்ந்து தமிழக முதல்வர், துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகள் போன்றோருக்கு மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ன காரணத்தினால் மின்வாரிய அதிகாரிகள் அச்சப்படுகின்றனர் என்று தெரியவில்லை. விபரீதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக இந்த மின்கம்பம் அகற்றப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோருகின்றனர். விரைவான நடவடிக்கை இல்லாத பட்சத்தில் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகின்றனர். என்ன செய்ய போகிறது மின்வாரியம்? மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பாரா?