திருவாரூர், மார்ச் 10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட எதிரொலியாக, வலங்கைமான் ஒன்றியம் சாரநத்தம் ஊராட்சியில் புலவனாறு பாலம் கட்டுமானப் பணி துவக்கப்பட்டுள்ளன. இது கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், 36 சாரநத்தம் ஊராட்சி, வேடம்பூர் கொக்கலாடி பகுதியில் பொதுமக்கள் பயணிக்க முடியாமல், ஆபத்தான முறையில் பல ஆண்டுகளாக இடிந்த நிலையில் கிடந்தது புலவனாறு பாலம். இதை முற்றிலும் இடித்துவிட்டு புதிதாக, தரமானதாக கட்டித் தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையொட்டி, பாலம் கட்டுமான பணிக்கு ரூ.1,75,30,000 நிதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பாலப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
பாலம் கட்டுமான பணிக்கு பரிந்துரை செய்த மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் பொது பணித்துறை அதிகாரிகள், நபார்டு வங்கி, வலங்கைமான் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போராட்டத்தில் வெற்றி கண்ட சிபிஎம், வாலிபர் சங்கத்தின் வேடம்பூர், கொக்கலாடி, கொக்கலாடி (வடக்கு) கிளைச் செயலாளர்கள் மற்றும் போராடிய அனைவருக்கும் பொதுமக்கள், வாலிபர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
புலவனாறு பாலம் கட்டுமானப் பணிக்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில், கட்சியின் வலங்கைமான் உறுப்பினர்கள் மற்றும் வாலிபர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.