districts

img

பச்சைத் துரோகி பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை

திருவாரூர், மார்ச் 24- தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்த எடப்பாடி  பழனிசாமியின் அதிமுக வெளி யிட்டுள்ள தேர்தல் அறிக்கை முற்றிலும்  ஒரு பம்மாத்து அறிக்கை என்று சாடி னார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்தியா கூட்டணி சார்பில் தஞ்சா வூர் தொகுதியில் போட்டியிடும் திமுக  வேட்பாளர் முரசொலி, நாகப்பட்டி னம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோ ருக்கு வாக்குச் சேகரித்து கொரடாச் சேரியில் சனிக்கிழமையன்று நடை பெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக பேசி யதாவது:

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளி யிட்டு இருக்கிறார்கள்! ஆட்சிப்  பொறுப்பை கையில் வைத்திருந்த போது, மக்களுக்கு ஒன்றுமே செய்யாத  பழனிசாமி - ஒன்றிய அரசில் பாஜக வுடன் சேர்ந்து, தமிழ்நாட்டுக்கு எந்த  நன்மையும் செய்யாமல், துரோகங் களை மட்டுமே செய்த பழனிசாமி - அவர்  பங்கிற்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

ஆளுநரை எதிர்த்து  ஒரு வார்த்தை பேசியதுண்டா?
அது தேர்தல் அறிக்கை அல்ல; பழனி சாமியின் பம்மாத்து அறிக்கை! அவரி டம் அதிகாரம் இருந்தபோது, ஒன்றிய அரசிடம் இருந்து உருப்படியாக எதை யாவது பெற்றுத் தந்தாரா? பாஜக-வின் பாதம் தாங்கியாக, உதவாக்கரையாக இருந்த பழனிசாமி, இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா?

‘‘ஆளுநரை நியமிக்கும்போது, முதலமைச்சரின் ஆலோசனை பெற்று  நியமனம் செய்ய வேண்டும்” என்று தி.மு.க. சொன்னதையே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்.

நான் கேட்கிறேன், பழனிசாமி அவர்  களே… திமுக அரசுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறாரே ஆளுநர்… அவரைக் கண்டித்து ஒரு நாளாவது ஒரு அறிக்கையாவது விட்டி ருக்கிறீர்களா? இல்லையே!

அதிமுக ஆட்சியில், ஆளுநர் ஆய்  வுக்குச் செல்கிறேன் என்று புறப்பட்ட போது, அவருக்கு எதிராகப் போராட்டம்  நடத்தியது தி.மு.க.!

தொல்லை தருவதையே தன்னு டைய அன்றாடப் பணியாக வைத்தி ருக்கும் ஆளுநருக்கு எதிராக இப்போ தும் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடுகிறது திமுக!

கை கட்டி - வாய் மூடி - முதுகு  வளைந்து - பாதம் தாங்கும் பழனிசாமி அவர்களே… இது பித்தலாட்டம் தானே!

உங்களுக்கு வீரவசனங்கள் தேவை தானா? மோடி அரசு கொண்டு வந்த  குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்பட வில்லை; அந்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அதிமுக ஓட்டு  போட்டதால்தான் அந்தச் சட்டமே  இன்றைக்கு அமலுக்கு வந்திருக்கிறது.

பகல் வேஷம், பசப்பு நாடகம்
குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரக்  காரணமாக இருந்துவிட்டு, ‘இலங்கை தமிழர்களுக்கான இரட்டைக் குடியு ரிமை கொண்டு வருவோம்’ - என்று  சொல்வதற்குப் பெயர் என்ன? பித்த லாட்டம்தானே!

அடுத்து ஒன்று சொல்கிறார்… ”மதுரையில் நிறுவப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடி யாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்கப்படு மாம்!” - பழனிசாமி சொல்கிறார். ஆகா  என்ன நாடகம் இது, என்ன நாடகம் இது!

பழனிசாமி அவர்களே… 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் திறப்பு விழாவில் மோடி பட்டன் அழுத்தியபோது பக்கத்  தில் உட்கார்ந்து கை தட்டினீர்களே… அதற்குப் பிறகு எய்ம்ஸ் அமைக்காமல் ஏன் இழுத்தடிக்கிறீர்கள் என்று ஒரு முறையாவது ஒன்றிய அரசின் கதவைத்  தட்டியிருப்பீர்களா?

இவ்வளவு ஆண்டுகளாக இது எதையுமே செய்யாமல் இப்போது வந்து நீங்கள் போடும் இந்த பகல் வேஷம் பாஜகவுக்கான பசப்பு நாட கம்தான் என்று மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்!

பச்சைத் துரோகம்
மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில்  அடித்தார்கள் பாஜக ஆட்சியாளர்கள். இதெல்லாம் கூறியபோது, பாதம் தாங்கி பழனிசாமி என்ன கூறினார்? “விவசாயிகள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

நான் அவர்களுடன் விவா தம் நடத்தத் தயார்’’ என்று கூறினார். ‘நானும் ஒரு விவசாயி’ என்று  பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு, பச்சைத் துரோகம் செய்தவர்தான் பழனிசாமி! மூன்று வேளாண் சட்டத்துக்கு எதி ராக ஒன்றரை ஆண்டு காலம் உழ வர்கள் தலைநகர் தில்லிக்கு வந்து போராடினார்கள்.  வெயிலிலும், கடும் குளிரிலும் படுத்திருந்த உழவர்கள் ஏரா ளமான பேர் பலியானார்கள்.

அவர் க ளை எல்லா வகையிலும் சித்ரவதை செய்தது பாஜக அரசு. இது எதற்கும் அஞ்சாமல், பின் வாங்காமல் அவர்கள் நின்றதைப் பார்த்து தான் மூன்று வேளாண் சட்டங்  களை  இறுதியில் பாஜக வாபஸ் வாங்கி யது. அப்போது ஒன்றிய பாஜக அரசு உழவர்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது.

ஆனால், அது எதையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறை வேற்றவில்லை. அதனால் மீண்டும் தில்லியில் உழ வர்கள் போராட்டத்தைத் தொடங்கி விட்டார்கள். தில்லிக்குள் அவர்கள் நுழைந்துவிடுவார்களோ என்று பயந்து  இரும்பு முள்வேலி, சாலைகளில் ஆணிப் படுக்கை அமைத்திருக்கிறது பாஜக அரசு.

பாகிஸ்தான் பார்டரை விட, மோச மான சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கி றார்கள். இதுவரை நான்கு உழவர்கள் இறந்துவிட்டார்கள். இந்திய நாட்டுக்குள் ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளைவிடச் சொந்த நாட்டு  விவசாயிகள்தான் பிரதமர் மோடியின்  கண்ணுக்கு எதிரிகளாகத் தெரிகிறார் கள்.

ஏழைத் தாயின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகள் நிலைமை இதுதான். தமிழ்நாட்டு உழவர்களையாவது நிம்மதியாக இருக்க விட்டாரா பிரதமர்  மோடி? அதுவும் இல்லை.

காவிரியில் பாஜக-அதிமுக கூட்டுத் துரோகம்
காவிரி பிரச்சனையில் பாஜகவும் – அதிமுகவும் செய்த துரோகங்களை டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த உங்க ளால் மறந்திருக்க முடியாது.

காவிரியில் தமிழ்நாட்டு உரிமை களுக்காகத் தலைவர் கலைஞர் எத்த னையோ செய்திருக்கிறார்… காவிரி நடு வர் மன்றம் அமைக்க வேண்டும் என்று,  1969-ஆம் ஆண்டு முதன்முதலாகக் குரல் கொடுத்ததில் இருந்து, காவிரி இறுதித் தீர்ப்பு வாங்கியது வரைக்கும், டெல்டா உழவர்களுக்காகத் தலைவர்  பாடுபட்டது அத்தனையும் உங்களுக்கு  நன்றாகத் தெரியும்! ஆனால், அதிமுகவும், பாஜகவும் செய்தது என்ன? வரலாற்றுப் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாமா?

காவிரி பாசன உழவர்களின் பாரம்பரிய உரிமையைக் காக்க, காவிரி மன்ற இறுதித் தீர்ப்பில் கூடுதலாக 60 டி.எம்.சி. நீர் கோரி 2007-ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு சிறப்பு முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கைக் கூட அடுத்து வந்த அதிமுக அரசு ஒழுங்காக நடத்தவில்லை.

ஒன்றிய பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் என்ன சொன்னார்கள்?
“காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடி யாது” என்று வாதாடினார்கள்! அதுமட்டுமா சொன்னார்கள்? ”காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட நடுவர் மன்றத்தின் உத்தர வுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். மாநிலங்களுக்கு இடையி லான நதிநீர்த் தகராறு சட்டத்தில் இதற்கான பல்வேறு விதிகள் இருக்கி றது. இதுகுறித்து உத்தரவிட உச்சநீதிமன் றத்துக்கே அதிகாரம் இல்லை.

எனவே, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்” என்று உச்சநீதி மன்றத்தில் மனு போட்ட அரசு ஒன்றிய பாஜக, அரசு. “இந்த விவகாரத்தில் நீங்கள் தலை யிட வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கி றோம்” என்று ஒன்றிய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் கூறினார்.

அதிகாரம் உண்டு என்று சொல்லி காவிரி உரிமையை நிலைநாட்டியது உச்ச நீதிமன்றம்தான். நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்து 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போதும், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையில் 14.75 டி.எம்.சி.யை விட்டுக் கொடுத்தது பழனிசாமிதான்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக நீர் தாவா முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள்தான் நமக்கு வாக்களிப்பதில்லையே என்று ஒன்றிய பாஜக, இதைச் செயல்படுத்தவில்லை.

உடனடியாகக் காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்று போராடியதும் திமுக தான். தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டி னோம். “கோ பேக் மோடி” என்று சொன் னோம். நான் காவிரி உரிமை மீட்புப் பய ணத்தை மேற்கொண்டேன்.

இரண்டு குழுக்களாக இந்தப் பயணத்தைத் திமுக நடத்தியது. மதச்சார்பற்ற கட்சிகளோடு ஒன்று சேர்ந்து, நாம் இதை நடத்திக் காட்டி னோம். திருச்சி முக்கொம்பில் இருந்து நான் பயணம் மேற்கொண்டேன். காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் தில்லியில்தான் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கூறினோம்.

ஒன்றிய பாஜக அரசு அதிகாரமற்ற ஒரு அமைப்பை தொடங்கியது. அதையும் பழனிசாமி அரசு தட்டிக் கேட்கவில்லை. ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறையுடன் இதைச் சேர்த்துவிட்டார்கள். அதையும் பழனிசாமி அரசு தட்டிக் கேட்கவில்லை. முதுகெலும்பு இல்லாமல் பாஜக அர சுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்தார் பழனிசாமி. இந்த இரண்டு பேரின் துரோகத்தையும் உணர்ந்து, இவர்களை டெல்டா மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.