திருவள்ளூர், நவ 4- பூரிவாக்கத்தில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சுகாதார நலத்துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட பூரி வாக்கம் கிராமத்திற்கு அருகில் உள்ள அத்திவாக்கம், அழிஞ்சிவாக்கம், ஆலப்பாக்கம், காவனூர், பெருமுடி வாக்கம், திருக்கண்டலம், கன்னிகைப் பேர், கிளாம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சி களில் ஏறக்குறைய 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்களுக்கு உடல்உபாதை ஏற்பட்டால் சிகிச்சைக்கு உரிய மருத்துவமனை இல்லை. குறிப்பாக பெண்களின் கர்ப்ப காலங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு கூட நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவலம் உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டுமெனில் 15 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பெரியபாளையம் செல்ல வேண்டும். அல்லது 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வெங்கல் பகுதிக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் குழந்தை கள், பெண்கள், முதியோருக்கு சாதாரண மருத்துவம் கூட கிடைக்காமல் சிரமப்படு கின்றனர். இந்த சூழலில் பூரிவாக்கம் ஊராட்சி என்பது 9 ஊராட்சிகளுக்கும் மையமான பகுதியாகும். மேலும் இங்கு பெரும்பாலான மக்கள் விவசாய கூலி தொழிலாளர்களை உள்ளடக்கிய பகுதியாகும். இந்த நிலையில் பூரிவாக்கம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, ஏற்கனவே 40 சென்டு நிலம் கையகப்படுத்தி மருத்துவத் துறைக்கு எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பூரிவாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, தலைமைச் செயலகத்தில் உள்ள சுகாதார நலத்துறை முதன்மை செயலாளரிடம் அண்மையில் பி.டில்லிபாபு மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.