திருவண்ணாமலை, பிப்.11- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில், திட்டமிட்டு நடத்தப்பட்ட சாதி வெறி தாக்குதலில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அருந்ததிய மக்களுக்கு நீதியும், வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி அனைவருக்கும் சீருதவியும் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார் தலைமை யில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகல நாதன், ப.செல்வன், கே.வாசுகி, எஸ். ராமதாஸ், எ.லட்சுமணன், என்.சேகரன் ஆகியோர் பேசினர். முன்னதாக, பிப்ரவரி 10ஆம் தேதி காலை, காவல்துறையினர் போராட்டக்குழு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது வீரளூர் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்பு டைய அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அன்றைய தினமே கைது செய்துவிடுவோம் என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் விளக்கக் கூட்டமாக நடைபெற்றது. வீரளூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர்கள் ஏழு மலை, முத்துராமன் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.