திருவண்ணாமலை, நவ.8- ஐந்து நாட்களாக சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் எனது வீட்டில் இருந்து ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.\
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் கடந்த 3 ஆம் தேதி அதிகாலையில் வருமான வரித்துறையினர் துவக்கிய சோதனையை ஐந்தாவது நாளான செவ்வாய்க்கிழமை (நவ.7) இரவு 10 மணிக்கு முடிவுக்கு கொண்டு வந்தனர்.
அதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்துக்கு வந்தார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
கடந்த 5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து சமூக ஊடகங்களில் கற்பனையாகவும், முரண்பட்ட கருத்துகளும் கூறப்பட்டன. அவை அனைத்தும் தவறானது. என்னை தொடர்புபடுத்தி வெளியான தகவல்கள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
வருமான வரித்துறை சோதனை என்பது தவறு இல்லை, அது அவர்களுடைய கடமை. சோதனை என்ற பெயரில், என்னுடைய நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், மற்றும் எனது டிரைவரையும் தனிமைப்படுத்தி பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.
அதே நேரத்தில், சோதனை என்னும் பெயரில் வருமான வரித்துறையினர் தனது குடும்பத்தினரை அச்சுறுத்தி சோதனையில் ஈடுபட்டதும், என்னிடம் அச்சுறுத்தும் வகையில் கேட்ட கேள்விகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் எனக்கு அதிகாரிகள் மீது எந்த வருத்தமும் கிடையாது. காரணம், அவர்களை ஏவி விட்டவர்கள் எங்கோ இருக்கிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்திலும் 2 நாட்கள் சோதனை நடத்தி தனது பணியை முடக்கினர். ஆனாலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெற செய்தனர்.
கல்லூரியில் பணிபுரியும் சாதாரண ஊழியர்களை கூட தனித்தனியாக சோதனை நடத்தினர். அதை வைத்து கற்பனையான பெயரில் கதைகளை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு பதில் சொல்ல
6 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்று மக்கள் தொண்டு செய்திருக்கிறேன். என் பெயரில் 48.33 சென்ட் நிலமும், காந்தி நகரில் ஒரு வீட்டு மனையும், சென்னையில் ஒரு வீடும் உள்ளது. இவற்றை தனது வேட்பு மனுவில் தெரிவித்திருக்கிறேன்.வேண்டியிருக்கிறது.
இதைத்தவிர ஒரு சென்ட் இடம் கூட என்னிடம் இல்லை. தொடர்ந்து நான் வருமான வரி செலுத்தி வருகிறேன். சட்டப்படி எதையும் எதிர்கொள்வோம். சோதனை எனக்காரணம் காட்டி எங்கள் தொண்டையும், உழைப்பையும் நிறுத்திவிட முடியாது.
5 நாட்களாக எனது அரசு பணி, கட்சிப்பணி முடக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி சொன்னதை போல பாஜகவின் அணிகளாக ஐடியும், ஈடியும் மாறிவிட்டன. நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி திமுகவை அச்சுறுத்துவது எந்தவிதத்தில் நியாயம். எங்கள் முதல்வர் மிசாவையே பார்த்தவர். எங்கள் இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான். அந்த நோக்கம் நிறைவேற உழைப்போம்.
என் வீட்டில் இருந்தோ, என்னிடம் இருந்தோ ஒரு பைசா கூட வருமான வரித்துறை பறிமுதல் செய்யவில்லை. ரெய்டு போன இடங்களில் பறிமுதல் செய்திருந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது, அவரது மகன்கள் எ.வ.குமரன், எ.வ.வே.கம்பன், எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஜோதி, வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.